Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தண்ணீர் வயலுக்குள் புகுந்து 50 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் நீரில் மூழ்கி நாசம்

செப்டம்பர் 05, 2019 01:54

கும்பகோணம்: கும்பகோணம் அருகே கபிஸ்தலம் மேட்டுத் தெரு பகுதியில் காவிரி ஆற்றில் இருந்து கொங்கன் வாய்க்கால் பிரிகிறது. தற்போது காவிரி ஆற்றில் அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், கொங்கன் வாய்க்காலின் ஷட்டர் தண்ணீரின் வேகத் தாளாமல் நேற்று நள்ளிரவில் உடைந்தது.

இதனால், உடைந்த ஷட்டர் வழியே தண்ணீர் பீரிட்டு கொங்கன் வாய்க்காலில் பாய்ந்தது. இந்நிலையில் கொங்கன் வாய்க்காலின் கரைகள் பலவீனமடைந்திருந்ததால், சுமார் 20 அடி நீளத்திற்கு கரை உடைந்து வயலுக்குள் பாய்ந்தது. இதனால் ஒரு வாரத்தில் அறுவடைக்குத் தயாராக உள்ள நெல், கரும்பு, மிளகாய் மற்றும் காய்கறி பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. 

இதனால் தங்கள் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர். ஷட்டர் உடைந்ததற்கு பொதுப் பணித்துறையினர் ஷட்டரை முறையாக பராமரிக்காததே காரணம் என்று பாதிக்கப்பட்ட விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் உடைந்த கொங்கன் வாய்க்கால் தலைப்பை வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு பார்வையிட்டு உடைப்பை சரி செய்யும் பணியை துரிதப்படுத்தினார். பயிர் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க ஆட்சியரிடம் பரிந்துரைக்கப்படும் என அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்தார்.

தற்போது உடைப்பு சரி செய்யப்பட்டு விட்டாலும், காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படுவதற்கு முன்பே திட்டமிட்டு ஷட்டர்களை சீரமைத்திருந்தால் இந்த உடைப்பு ஏற்பட்டிருக்காது என்றும், பயிர் இழப்பு ஏற்பட்டிருக்காது எனவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

தலைப்புச்செய்திகள்